முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
முருகன் சூரபத்மனை வதம் செய்த இடம் தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம் அறுபடை வீடுகளில் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கடற்கரை சார்ந்த தலம் என பல சிறப்புகளை திருச்செந்தூர் பெற்றுள்ளது.
இந்த முருகன் கோவிலுக்கு தினசரி உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தங்கி சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
இதனிடையே ஜோதிடர் ஒருவர் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் நிலவொளியில் தங்கி மறுநாள் அதிகாலை புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கால் வைக்க கூட இடமில்லாத அளவுக்கு கடற்கரையில் மக்கள் திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக கோவில் முன்பு தங்கும் பக்தர்களிடம் அதிக அளவில் திருட்டு நடைபெறுவதும் பொருட்கள் காணாமல் போவதும் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
எனவே பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கோவில் நிர்வாகம் நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி இன்று முதல் கடற்கரை பகுதியில் யாரும் இரவு நேரங்களில் தங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கோவில் கடற்கரை பகுதியில் தரிசனத்திற்காக குடும்பத்துடன் தங்கி இருக்கும் பக்தர்களை திருக்கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர், அப்புறப்படுத்தினர்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கோவில் முன்புள்ள கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி திருக்கோவில் முன்புள்ள கடற்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யா கோவில் வரை உள்ள கடற்கரை பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாதவாறு கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தற்பொழுது அவர்களுக்கு அறிவுரை வழங்கி கோவில் வளாகங்களில் மற்றும் அங்குள்ள மண்டபங்களில் தங்கிக் கொள்ளுமாறும் கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

