செங்கல்பட்டு அருகே உள்ள தொழுப்பேடு பேருந்து விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொது நிவாரண நிதி
இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஒன்று கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியதில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்விப்பட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் காயமடைந்த ஒன்பது நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.மேலும், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என முதல்வர் ஸ்டாலின் செய்தி வெளியீட்டுட்டிருந்தார்.

