கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை முதல்வர் ஸ்டாலின் வீணடித்துக் கொண்டு இருக்கிறார் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை 2021ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் 68% அதிகரித்திருப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது.
இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப் படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது திமுக அரசு.
ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி ஆணையம் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இந்நிலையில் ஜாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு ஆண்டுகளாகக் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முதல்வர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக் குழு கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது.
இந்தக் குழுவின் தலைவரான முதல்வர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்? இது தவிர மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழு காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என அனைத்துமே செயலற்று இருக்கையில் மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாகத் தெரியவில்லை.
கண்துடைப்புக்காக ஆணையம் குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை முதல்வர் ஸ்டாலின் வீணடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால் இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? இவ்வாறு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.