மத்திய பட்ஜெட்டில் பங்கு பரிவர்த்தனையில் ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்துக்கான வரி 0.02%-லிருந்து 0.05 %-ஆகவும், ஆப்ஷன்ஸ் வரி 0.10%-லிருந்து 0.15%-ஆகவும் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், என்டிடிவி ப்ராபிட் மாநாட்டில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியதாவது: ”ஊக வணிகத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு கசப்பு மருந்தாகவே பட்ஜெட்டில் எஸ்டிடி வரி உயர்த்தப்பட்டது. முறைகேடுகளை தடுப்பதே இதன் முக்கிய நோக்கம். அடிக்கடி வர்த்தகம் செய்யும் ஊக வணிகர்களை இந்த வரி உயர்வு நேரடியாகப் பாதிக்கும்.
உண்மையான முதலீட்டாளர்களைப் பாதிக்காமல் சந்தையின் அதீத வேகத்தைக் குறைக்க வேண்டும். வருவாய் மற்றும் வளர்ச்சியைத் தாண்டி உலக அரசியல் நகர்வுகளையும் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், மூலதன செலவின நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன் நாட்டின் வளர்ச்சிக்கு ஒழுக்கமான நிதி நிர்வாகமும் அத்தியாவசியமானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

