கோடை காலம் தொடங்கிவிட்டாலே நம் அனைவரது கைகளும் முதலில் தேடுவது ஏசி ரிமோட்டைத்தான். வெளியில் அலைந்து திரிந்து வீட்டுக்குள் நுழைந்ததும் ‘சில்லென்று’ இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் ஏசியின் வெப்பநிலையை 18 அல்லது 20 டிகிரியில் வைக்கிறோம்.
ஆனால், நாம் காட்டும் இந்த அவசரம் நமது உடல்நலத்திற்கும், மாத இறுதியில் வரும் மின் கட்டணத்தில் எவ்வளவு பெரிய சுமையை ஏற்படுத்துகிறது என்பதை நாம் உணர்வதில்லை. இது குறித்து தெலுங்கானா மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு கழகம் (TG REDCO) சமீபத்தில் ஒரு முக்கிய கள ஆய்வை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அந்த ஆய்வின்படி, ஏசி வெப்பநிலையை 25 டிகிரியில் பராமரிப்பது வெறும் மின்சார சேமிப்பு மட்டுமல்ல, அது நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் அத்தியாவசியமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மின் நுகர்வு குறையும்: தெலுங்கானா மாநிலத்தின் எரிசக்தி சேமிப்புத் திட்டங்களுக்கான நோடல் ஏஜென்சியாகச் செயல்படும் REDCO அமைப்பு, ஏசி பயன்பாடு குறித்து விரிவான ஆய்வு நடத்தியது. அதில், ஒரு ஏசியை 25 டிகிரி செல்சியஸில் தொடர்ந்து இயக்கும்போது, ஆண்டுக்குச் சராசரியாக 432 யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஒரு ஏசியிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வில் 310 கிலோவை நாம் குறைக்க முடியும். இது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாகும். மாநிலம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 25 டிகிரியை பின்பற்றினால், ஒட்டுமொத்த மின் நுகர்வை 6 சதவீதம் வரை குறைக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் தீவிரத்தை உணர்ந்த தெலுங்கானா அரசு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏசி வெப்பநிலையை 25 டிகிரி செல்சியஸில் மட்டுமே வைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொருளாதாரச் சுமை மற்றும் மின் தேவை: தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே மின்சாரத் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி 16,145 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்திலேயே 16,504 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மின்சார விநியோக நிறுவனங்கள் (DISCOMs) ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் (IEX) சுமார் 10 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. அரசு அலுவலகங்களின் மின்சாரக் கட்டணம் மட்டும் மாதம் 100 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. ஏசி வெப்பநிலையை 25 டிகிரியில் வைத்திருப்பதன் மூலம், இந்தச் செலவில் மாதம் 50 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என REDCO கணித்துள்ளது.
தொழில்நுட்பப் பார்வையும் தீர்வும்: இது குறித்து TG REDCO மேலாண் இயக்குநர் அனிலா அவர்கள் கூறுகையில், “ஒரு யூனிட் மின்சாரத்தை சேமிப்பது என்பது இரண்டரை யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சமம். 2 கிலோவாட் சோலார் பேனல்களை ஒரு கட்டிடத்தில் நிறுவினால், ஒரு நாளைக்கு 8 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இது 182 செடிகளை வளர்ப்பதற்கு இணையான பலனைத் தரும்,” எனத் தெரிவித்துள்ளார்.
குறைந்த வெப்பநிலையில் ஏசி பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்:
ஏசியை 21 டிகிரிக்கும் குறைவாக வைத்து பயன்படுத்துவது தற்காலிக குளிர்ச்சியை தந்தாலும், நீண்ட கால அடிப்படையில் உடலில் பின்வரும் சிக்கல்களை ஏற்படுத்தும் என மருத்துவர்களும் இந்த ஆய்வும் எச்சரிக்கின்றன.
அதீத குளிர்ச்சியான சூழலில் நீண்ட நேரம் இருப்பது தசைப்பிடிப்பு (Stiffness) மற்றும் மூட்டுகளில் வலியை உண்டாக்கும். குறிப்பாகப் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது.
ஏசி காற்றில் ஈரப்பதம் மிகக் குறைவாக இருக்கும். இது நம் உடலில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை உறிஞ்சி, தோல் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.
மிகக் குறைந்த வெப்பநிலையில் இருக்கும்போது மூக்கில் உள்ள சளி சவ்வுகள் (Mucous membranes) காய்ந்துவிடும். இதனால் சைனஸ், தும்மல் மற்றும் சுவாச கோளாறுகள் எளிதில் தொற்றிக்கொள்ளும்.
வெளியில் உள்ள அதிக வெப்பத்திற்கும், உள்ளே இருக்கும் கடும் குளிர்ச்சிக்கும் இடையே உடல் அடிக்கடி மாறும்போது ரத்த அழுத்தம் மற்றும் உடல் வெப்பநிலையைச் சீராக வைப்பதில் உடலுக்குச் சிரமம் ஏற்படும். இது தேவையற்ற தலைவலி மற்றும் சோர்வை உண்டாக்கும்.
எனவே, 25 டிகிரி செல்சியஸ் என்பது மனித உடலுக்கு உகந்த, இதமான வெப்பநிலை ஆகும். இது மின்சாரத்தையும் சேமிக்கும், ஆரோக்கியத்தையும் காக்கும்.

