பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய வீட்டருகே, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தமிழக காவல் துறை விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழக காவல் துறையின் விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கும், காவல் துறையின் விசாரணைக்கும் முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன் காவல் துறையின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்குத் தடைவிதித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “இந்த வழக்கில், இன்னும் விசாரணை முழுமையாக முடியவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் ஆதாரங்களை அழித்து, சாட்சிகளைக் கலைத்து விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 12 பேரும் மார்ச் 6-ஆம் தேதிக்குள், சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பின்னர், அவர்கள் சரணடைவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜாமீனை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

