அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அடுத்தாண்டு பிப்ரவரி 22ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலை சந்திக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் 1,300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போதைய தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி உள்ளார்.
விருப்பம் தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர், துணை தலைவர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசவும் படம் தொடர்பான சிக்கல்கள் நடிகர்களின் சம்பளம் மற்றும் படத்தயாரிப்பு செலவு வினியோகத்தில் உள்ள பிரச்னைகளை சுமுகமாக தீர்க்கவே தயாரிப்பாளர் சங்கம் 1998ம் ஆண்டு துவக்கப்பட்டது.
இதுவரை இச்சங்கம் சந்தித்த தேர்தல்களில் அரசியல் தலையீடுக்கு இடமே இல்லாமல் இருந்து வந்தது.
அதை தொடரும் வகையில் தற்போதும் எல்லாரும் கூடி பேசி போட்டியின்றி தலைவரை தேர்வு செய்ய சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அப்படியே போட்டி ஏற்பட்டாலும் அதை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர்.
ஆனால் அதற்கு எதிராக ஆளும் கட்சியை சேர்ந்த தயாரிப்பு நிறுவன முக்கிய நிர்வாகி செயல்பட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் பலரை தன் பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்திற்கு அழைத்து பேசி வருகிறார்.
அதன் வாயிலாக ஆளும் கட்சிக்கு ஆதரவானவர் என்ற போர்வையில் தனக்கான ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருவதாக புகார் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு இதற்காக முதல்வர் குடும்பத்தினர் பெயரையும் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இந்த விஷயம் ஆளும் கட்சி மேலிடத்திற்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.
படத் தயாரிப்பு நிறுவனத்தை கவனிக்கும் ஆளும் கட்சியின் இளம் வாரிசுக்கு பக்க பலமாக உள்ள அந்த நிர்வாகி தயாரிப்பாளர் சங்கத்தையே தன் கையில் வைத்துக்கொள்ள திட்டமிட்டு இப்படி சங்க விதிகளுக்கு மாறாக செயல்படுவதாக தயாரிப் பாளர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

