பள்ளியில் கூட பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத திமுக அரசு என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு:
கும்பகோணம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 7 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்றுக் கொடுப்பதை விடுத்து, ஆசிரியர்கள் எனும் போர்வையில் சில காமக் கொடூரர்களைத் திரியவிட்டு, சிறுமிகளின் பாதுகாப்பைப் பறிப்பது தான் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமா? இது தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா முதல்வர் ஸ்டாலின்
அவர்களே?
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்று மேடையெங்கும் கோஷமிட்டு, சமூகநீதியின் காவலர்களாக நாடகமாடி விளம்பரம் வெளியிடுவதில் மட்டுமே கவனமாக இருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைத் தூக்கியெறியும் அறிவாலயம் அரசு தூக்கியெறியப்பட்டால் மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்!
இவ்வாறு அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

