பூப்புனித நீராட்டு விழாவில் 100-க்கும் மேற்பட்ட சீர்வரிசைத் தட்டுகளுடன் மேளதாளங்கள் முழங்க லாரியில் வந்த தாய்மாமன் சீர்வரிசையைப் பார்த்து பொதுமக்கள் வியந்தனர்.
ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளையாக பிறந்தால் அவருக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகம் இருக்கும் என்பார்கள். அதே போல், தனது தங்கை, அக்கா ஆகியோரின் பெண் குழந்தைகளுக்கு சீர் செய்வது தாய்மாமனின் கடமை ஆகும். அதனை சகோதரிகள் மிகவும் கௌரவமாகப் பார்க்கிறார்கள். இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு இன்றையக் காலகட்டத்தில் இது மிகவும் அவசியம் ஆகும்.
பெண்ணுக்கு பூப்புனித நீராட்டு விழா என்றாலும், பெண்ணுக்கு திருமணம் என்றாலும் தாய்மாமன் சீர்வரிசை தனித்து இடம்பெறும். இதனால் விழாவிற்கு வந்தவர்கள் பார்வையிட்டு மகிழவர். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த தம்பதி மகேஷ்-வசந்தியின் மகள் மாளசுமிக்ஷாவின் பூப்புனித நீராட்டு விழா ஆறுமுகநேரியில் உள்ள தனியார் மஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதற்காக அவரது தாய்மாமன் மற்றும் அவரது உறவினர்கள் பூப்புனித நன்னீராட்டு விழாவைப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்தனர். அதன் ஒரு பகுதியாக தாய்மாமன் சீர்வரிசையாக 100- க்கும் மேற்பட்ட சீர்வரிசை தட்டுகளை ஒரு பெரிய சரக்கு லாரியில் ஏற்றி வாணவேடிக்கைகள், மேளதாளங்கள், ஓயிலாட்டம், பூக்காவடி, மாடு ஆட்டம், மயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம், ட்ரம்ஸ் இசையுடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன.
இவை தவிர குரங்கு பொம்மை உள்பட பல்வேறு பொம்மைகள் வேடமிட்டவர்கள் ஆடிப்பாடி ஊர்வலத்துடன் வந்தனர். மேலும் குதிரை பூட்டி மின்னொளியில் ஜொலித்த சாரட் வண்டியில் மகள் மாளசுமிக்ஷா மற்றும் தாய்மாமா ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். வீட்டில் இருந்து மெயின் பஜார் வழியாக விழா நடைபெறும் மஹாலுக்கு ஊர்வலமாக வந்தனர். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. அந்த விருந்தில் விதவிதமான உணவுகளும் இடம் பெற்றிருந்தது.
தாய்மாமன் எப்படி சீர் செய்ய வேண்டும்? என்பதற்கு உதாரணமாக இந்த விழா அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. வழிநெடுகிலும் தாய்மாமன் சீர்வரிசையைப் பொதுமக்கள் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

