சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதில் இன்ஜின் பகுதி சேதம் அடைந்தது.
இதனால் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு பயணிகள் 190 பேருடன் ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றது.
விமானம் பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதன் மீது பறவை மோதியது.
விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் சென்னையில் உள்ள ஏர் இந்தியா பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய ஆணைய பராமரிப்பு பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை முழுவதும் பரிசோதித்தனர்.
இன்ஜின் பகுதி அதிக சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவர அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

