திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்தது ஜெயலலிதா தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, குன்னூரில் திரண்டு இருந்த கூட்டத்தினர் மத்தியில் பேசினார்.
அப்போது இபிஎஸ் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா? விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. வேலை வாய்ப்பு குறைந்து, செலவு அதிகரித்து விட்டது. நீலகிரியில் ஆன்லைன் பாஸ் முறை வந்துள்ளது.
திமுக நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தினால் இப்படிப்பட்ட நிலை வந்திருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாகனம் தான் நீலகிரி செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.
இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீசனில்தான் அவர்களுக்குப் பிழைப்பு நடக்கும்.
திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் இன்றைக்கு 6 ஆயிரம் வாகனத்துக்கு மேல் வர முடியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தில் மக்களின் பிரச்னையை எடுத்துச்சொல்லி இதற்கு ஒரு தீர்வு காணப்படும். குன்னூர், கூடலூர், உதகை வியாபாரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுக்க அதிமுக அரசு துணை நிற்கும்.
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. போதைப் பொருள் இல்லாத இடமே கிடையாது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள்.
திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல். திமுக எம்பி கனிமொழி பேசுகிறார். அதிமுக கட்சி அலுவலகம் டில்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் இருக்கிறது என்று பேசுகிறார். அதிமுக அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது வந்து பாருங்கள்.
அதிமுகவை உடைக்க, பிளக்க சதி செய்தீர்கள், எந்த விதத்திலும் அதிமுக செயல்படக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் மூலமாக வெவ்வேறு விதத்தில் முயற்சி செய்தீர்கள், அத்தனையும் அதிமுக தொண்டர்களால் முறியடிக்கப்பட்டது.
திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்தது ஜெயலலிதா தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
திமுக இரண்டாகப் போனது கருணாநிதி தடுமாறிக் கொண்டிருந்தார், அப்போது சிலர் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தபோது காப்பாற்றிக்கொடுத்தது அதிமுக.
எப்போதும் அதிமுகவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்துதான் பழக்கம். ஆனால் திமுக மக்களுக்கும் உதவிசெய்தது கிடையாது, கூட்டணி கட்சிக்கும் உதவி செய்த வரலாறு கிடையாது.
திமுகவினர் குன்னூர் நகராட்சியில் கடைகளுக்கு வாடகை உயர்த்தமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் உயர்த்திவிட்டனர்.
இதை எதிர்த்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தினோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் வியாபாரிகளை அழைத்து தீர்வு காணப்படும். இவ்வாறு அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

