ஈரானின் பேரரசனாக கடந்த கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வந்த ஆயதுல்லா அலி காமேனி அமெரிக்க தாக்குதலில் இன்று உயிரிழந்த நிலையில், உலகெங்கும் உள்ள அவரது ஆதரவாளர்கள் இந்த மரணத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரான் மீது நேற்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் ஆயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். தெஹ்ரானில் நடந்த வான் தாக்குதலில், காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். காமேனியின் இறப்பை ஈரானின் அரசு ஊடகமும் உறுதி செய்தது. இந்த தாக்குதலில் காமேனியுடன் அவரது மகள், பேரன், மருமகன், மருமகள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர். கடந்த 40 ஆண்டுகளாக ஈரானின் அரசியலை தனது சுண்டு விரரால் கட்டுப்படுத்திய காமேனியை, இன்று அந்நாடு பறிக்கொடுத்துள்ளது.
யார் இந்த காமேனி?
ஈரான் நாட்டில் கடந்த 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட நிலையில், மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு இஸ்லாமிய குடியரசாக ஈரான் உருவெடுத்தது. அதன் முதல் உச்ச தலைவராக ருஹோல்லா கோமேனி பதவியேற்றார். அவர் மறைந்த நிலையில், 1989ஆம் ஆண்டு ஈரானின் உச்ச தலைவராக ஆயத்துல்லா அலி காமேனி பதவியேற்றார். அன்று முதல் கடந்த 4 தசாப்தங்களாக ஈரானின் தலைமகனாக, அமெரிக்க-இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக அவர் திகழ்ந்து வந்தார்.
இராணுவ பலத்தை கூட்டிய காமேனி
ஈரானின் உயர் தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விட மேலானது. வாழ்நாள் முழுவதும் இந்த பதவியில் தொடர்ந்து இருக்கலாம். ஆனால், இந்த பதவியில் அவ்வளவு எளிதில் யாராலும் அமர முடியாது. ஈரானின் மண்ணையும், மக்களையும் நேசிக்கும் தன்னிகரில்லா தலைவர்களே அந்த பதவியில் இதுவரை இருந்துள்ளனர்.
அதை உறுதி செய்யும் விதத்திலேயே அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகவே கடந்த பல ஆண்டுகளாக காமேனி இருந்து வந்துள்ளார். குறிப்பாக, ஈரானின் மிக வலிமையான ராணுவ அமைப்பான புரட்சிகர பாதுகாப்பு படையை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார்.
அமெரிக்காவின் கண் அசைவுக்காக மத்திய கிழக்கு நாடுகள் பல ஏங்கி கிடந்த நிலையில், அணுசக்தி கையிருப்பு மூலம் மத்திய கிழக்கில் தனிப்பெரும் ராஜாவாக ஈரானை மாற்றினார். ஆனால் இன்று அதுவே அவரது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து என்றால் அது மிகையல்ல.

