நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அந்த துறை அமைச்சரான கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் வீடுகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் ரூ. 1,020 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை முடிவு செய்தது. இது தொடர்பான ஆதாரங்களையும் அமலாக்கத் துறை கைப்பற்றியதாக தெரிகிறது. இது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், “சுமார் 2,538 பேரிடம் தலா ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் 10 ரூபாய் நோட்டை அடையாளமாக பயன்படுத்தியுள்ளனர். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் இதுதொடர்பான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் டிஜிபி நடவடிக்கை எடுக்காததால், அமலாக்கத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்.பி. இன்பதுரை, மதுரையை சேர்ந்த ஆதிநாராயணன் ஆகியோர் அண்மையில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இதனை கடந்த 4 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஒரு மனுதாரரான ஆதிநாராயணன் மீது 4 கொலை, கொலை முயற்சி என 32 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டிருப்பதால், நல்ல நோக்கத்திற்காக அவர் வழக்கு தொடர்ந்தாரா? என தெரியாததால் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமலாக்கத் துறையின் கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவு பிறப்பித்துவிட்டது என்பதால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என யாரும் கோர முடியாது.
புகார்கள் மீது ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த வேண்டும் என்பது கட்டாயம். புகார் அளித்ததற்காக உடனே வழக்கு பதிவு செய்ய முடியாது. சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தலைமை நீதிபதி எம்.எம் ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு ஒத்தி வைத்தது. இந்த நிலையில், இந்த இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.எம் ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “டிஜிபிக்கு அமலாக்கத் துறை அளித்தது புகார் கடிதம் கிடையாது. மாறாக, ஆதாரங்கள். எனவே, வழக்கில் குற்ற முகாந்திரம் இருப்பதால் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
யார் இந்த ஆதிநாராயணன்?
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் என்கிற ஆதிநாராயணத்தேவர். மருதுசேனை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்ற போதிலும், சில முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறார்.
கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலில், டிடிவி தினகரனின் அமமுக சார்பில் மதுரை திருமங்கலம் தொகுதியில் ஆதி நாராயணன் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமாரின் வாக்குகளை பிரிக்கும் நோக்கத்தில், ஆதிநாராயணன் களமிறக்கப்பட்டார்.
இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக அவர் செயல்படவுள்ளதாகவும், வாய்ப்பு கிடைத்தால் பாஜக பின்புலத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதிநாராயணன் மீது 2013ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 4 கொலை வழக்குகள் மற்றும் துப்பாக்கிச் சூடு வழக்கு பதிவாகியுள்ளது. கள்ளிக்குடி அருகே தன்னைத் தாக்க வந்த கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆதிநாராயணன் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மையிட்டான்பட்டி ஊராட்சித் தேர்தல் மோதல் தொடர்பாக ஞானசேகரன் என்பவரின் மகன் வினித் கொல்லப்பட்ட வழக்கில் ஆதிநாராயணன் குண்டர் சட்டத்திலும் (Goondas Act) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக ஆதிநாராயணனை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

