தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழல்கள்தான், தங்கம் விலையை நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சர்வதேச அளவில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் – ரஷ்யா போரும், இஸ்ரேல் – பாலஸ்தீன போரும் சர்வதேச வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
போர் பதற்றம் காரணமாக அச்சமடைந்த முதலீட்டாளர்கள், பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு பதிலாக, தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதுவே, தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி, அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஈரான் இணங்க மறுப்பதால், அமெரிக்கா கடுங்கோபத்தில் உள்ளது. இதனால் எந்நேரம் வேண்டுமானாலும் அந்நாடு மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை காணப்படுகிறது. இதுவும் தங்கம் விலை எகிற முக்கிய காரணியாக அமைந்தது.
அதே சமயத்தில், தொடர்ந்து சரிந்து வந்த டாலரின் மதிப்பு தற்போது நிலைத்தன்மையை பெற்றிருக்கிறது. எனவே, சமீபகாலமாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச்சந்தையை நாடி செல்ல தொடங்கியிருக்கின்றனர். இதன் காரணமாக, கடந்த சில தினங்களாக தங்கம் விலை சற்று சரிந்து வந்தது. ஆனால், இந்த விலை சரிவு தற்காலிகமானதுதான் என நிபுணர்கள் தெரிவித்து வந்தனர்.
இதனை மெய்ப்பிக்கும் விதமாக, இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.300 உயர்ந்து, ரூ.15,200-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலையை போல வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

