தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இருமல் மருந்து கம்பெனி உரிமையாளர், மாநில அரசின் மருந்து நிர்வாக அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டதோடு, 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
இது தொடர்பாக மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த ஸ்ரீசென் பார்மா மருந்து கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஸ்ரீசென் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலைக்கு வந்து ஆய்வு செய்து, மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்கள், தயாரிக்கப்பட்ட மருந்தின் மாதிரிகளை பறிமுதல் செய்தனர்.
மருந்து உற்பத்தி நிறுவன மேலாளர் ஜெயராமன், ஆய்வக ஆய்வாளர் மகேஷ்வரி ஆகியோரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கையில் எடுத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீசென் ஃபார்மா மருந்து கம்பெனி உரிமையாளரான ரங்கநாதன் வீடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது.
கோடம்பாக்கம் நாகர்ஜூனா 2 வது தெருவில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
CRPF வீரர்கள் பாதுகாப்போடு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போல காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள ரங்கநாதனின் மருந்து கம்பெனி அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.
மேலும் தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இணை இயக்குனரான கார்த்திகேயன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் தற்போது சஸ்பெண்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் கார்த்திகேயன் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வரும் மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் தீபாஸ் ஜோசப் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை 7 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்பான 7 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

