தமிழகத்தில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பான கொள்கையை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் பல பெண் பணியாளர்கள், மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியால் அவதிப்படுகின்றனர். அதனை சமாளித்தபடியே அவர்கள் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி, பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நல பிரச்சினைகள், ஊதிய இழப்பு மற்றும் பணியிட சிரமங்கள் குறித்து விளக்கி தமிழக அரசுக்கு விரிவான மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
மாதவிடாய் என்பது இயற்கையான உயிரியல் செயல்முறை. அது, உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கும். இது, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது. பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் அடிப்படையில், மாதவிடாய் விடுப்பு கொள்கையை உருவாக்குவது சட்டப்படி செல்லுபடியாகும் நலத்திட்ட நடவடிக்கையே.
ஏற்கெனவே, கர்நாடகா, பீஹார், ஒடிசா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மாதவிடாய் விடுப்பு தொடர்பான கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.
ஆகவே, தமிழகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, “இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக தமிழக மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

