இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மீதவுள்ள இடங்களை பிடிக்க, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் சல்மான அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், சூப்பர் 8 சுற்றில் தடுமாறி வருகிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அந்த அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியதன் காரணமாக, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் ஏறத்தாழ இழந்திருந்தது. இருப்பினும் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியதன் மூலம் பாகிஸ்தானுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரும் வெற்றியை பதிவுசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அணியின் பேட்டிங்கில் சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகர் ஜமான் ஆகியோரும், பவுலிங்கில் உஸ்மான் தாரிக், அப்ரார் அஹ்மத், சல்மான் மிர்ஸா ஆகியோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இலங்கை அணி
மறுபக்கம் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இருப்பினும் அந்த அணி இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக நிச்சயம் போராடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அணியின் பேட்டிங்கில் பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் மீதும், பந்துவீச்சில் துஷ்மந்தா சமீரா, துஷன் ஹெமந்தா ஆகியோர் மீதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நேருக்கு நேர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கை அணி 10 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 35 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 18 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 27 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேரலை தகவல்கள்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும். இதில் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

