சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் நீதி கேட்கும் பிரசார பயண துவக்க விழா மதுரை அண்ணாநகரில் நடந்தது.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பாஜக – அதிமுக கூட்டணி கணக்கு வெற்றியடையும். புயல், மழை, பனி எதுவானலும் அடுத்த 4 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இறுமாப்புடன் எங்களை தொடக் கூட முடியாது.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
பணம் கொடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறலாம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதால் அவர்கள் ஓட்டு கிடைத்துவிடும் என்ற இறுமாப்பில் தான் அவர் இப்படி பேசுகிறார்.
திமுக ஆட்சியில் அந்தக் கட்சி நிர்வாகிகளின் தங்கை, தாய்க்கு கூட பாதுகாப்பில்லை என அவர்களே நினைக்கும் நிலையில்தான் ஆட்சி உள்ளது.
கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி உயிரிழப்புக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு கொடுக்கின்றனர்.
ஆட்சிக்கு வந்தவுடன் வேட்டி கட்டிய ஸ்டாலின் தற்போது பேன்ட் அணிகிறார். புட்பால் விளையாடிய முதல்வர் பேரன் இன்பநிதி சினிமாவில் நடிக்கிறார்.
துணைமுதல்வர் உதயநிதி நாயுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார்.
அந்த நாய்க்கு மீசை கருப்பாக இருந்தது. இப்போது வெள்ளையாக இருக்கு.
நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என சொல்ல சொல்கின்றனர். இது தான் இவர்களின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம்.
ஆனால் மதுவிலக்கு துறை அமைச்சரை சாராயத்துறை அமைச்சர் என்று சொன்னால் கோபம் வரும்.
தன் பெயரிலேயே திட்டங்கள் அறிவிப்பது, கருணாநிதி பெயரில் பாலம், ரோடு, பாராட்டு விழா நடத்துவது தான் திமுகவின் நான்கரை ஆண்டுகால சாதனை.
இந்த ஆட்சி துாக்கி எறியப்பட வேண்டும். மீண்டும் பழனிசாமியை முதல்வராக வர வேண்டும்.
இளைஞர்கள் சினிமாவிற்கு போங்கள் விசில் அடியுங்கள் ஆனால் சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆட்சியை தருவார்கள் என நம்பிவிட வேண்டாம்.
வாக்கு பிளவு ஏற்படுத்தி நம்மை திமுக ஜெயிக்க முடியும் என இறுமாப்புடன் உள்ளது. அதை உடைத்தெறிய வேண்டும்.
இந்த யாத்திரைக்கு செல்லுவோர் கட்சி சாராத ஒருவரை உடன் அழைத்து செல்லுங்கள். மதுரை மண்ணில் துவங்கியது வெற்றியை தரும்.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற மருந்தால் தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயல்படவில்லை என ஸ்டாலின் சொல்கிறார்.
அதன் பின் தமிழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
உண்மை நிலவரம் என்னவென்றால் நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் ஆய்வுகள் நடத்தவில்லை என்பது தான்.
இதற்கு காரணம் ஆய்வுக் கூட்டங்களை நடத்தாத முதல்வர் தான்.
ஆட்சி நடத்த தெரியாத பொம்மை முதல்வராக உள்ளார். 2026 ஆட்சி மாற்றத்திற்கான அரிய வாய்ப்பு.
இதை தவறவிடாமல வெற்றி பெற வேண்டும் என்றார்.
மத்திய இணை அமைச்சர் முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, த.மா.க., தலைவர் வாசன், இந்திய ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பா.ஜ., முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நயினார் நாகேந்திரன் பிரசார பயண பாடலை முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். குறும்படத்தை மத்திய இணை அமைச்சர் முருகன் வெளியிட்டார்.

