சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு 1 மணிநேரம் 13 நிமிடங்களில் செல்லும் வகையில் அதிவேக ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக ரயில், கனிம தொழில் பெரு வழித்தடம் உள்ளிட்ட அறிவிப்புகள் தமிழ்நாட்டிற்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தாது வளம் மிக்க மாநிலங்களான ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய அரிய வகை கனிம தொழில் பெரு வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான இந்த தொழில் இணைப்பு மூலம், ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் அரிய வகை கனிமங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகக் கடலோரப் பகுதிகளில் உள்ள ‘மோனசைட்’ போன்ற கனிம மணலைப் பிரித்தெடுக்கப் புதிய ஆலைகள், ஆராய்ச்சி மையங்கள் அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், சென்னை, ஓசூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இ-வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல், தென்னிந்தியாவின் நீண்ட காலக் கனவான ஹைதராபாத் – சென்னை, சென்னை- பெங்களூரு இடையே அதிவேக ரயில் இயக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதோடு, வர்த்தகப் போக்குவரத்தையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடத்தில் செல்லும் வகையில் அதிவேக ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய 3 நகரங்களை இணைத்து “தெற்கு அதிவேக முக்கோணம்” என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்படும் எனக் கூறினார். இத்திட்டம் மூலம் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் பயன் அடையும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு வந்தே பாரத் ரயில் சுமார் 4 மணிநேரத்தில் தற்போது செல்லக்கூடிய நிலையில், இந்த அதிவேக ரயில் பயன்பாட்டிற்கு வந்தால், சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு ஒரு மணிநேரம் 13 நிமிடங்களில் செல்லலாம். இதே போன்று, சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு 2 மணிநேரம் 55 நிமிடங்களில் சென்றடையலாம்.

