2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் நீலகிரி ஈரோடு தேனி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் நாளை 15ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 18 மாவட்டங்களில் நாளை மறுநாள் 16ம் தேதி ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியாவில் அடுத்த 48 மணி நேரத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கும்.
ஒடிசா சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகியது.
அடுத்த 2 நாட்களில் தென் மேற்கு பருவமழை இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் இருந்து முழுமையாக விலகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

