சொத்து முடக்கம் தொடர்பாக, அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த 2006,- 2011ம் ஆண்டுகளில், வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக, 2 கோடியே, ஒரு லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
பின்னர், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் பெரியசாமி, அவரது மகனும், பழனி தொகுதி திமுக, – MLA செந்தில்குமார், மகள் இந்திரா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில், கடந்தாண்டு சோதனை நடத்தினர்.
இதையடுத்து, சொத்துக்களை முடக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு, அமைச்சர் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, அமலாக்கத் துறை, நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீசை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணையை எதிர்த்தும், பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பெரியசாமி தரப்பில், சொத்து முடக்கம் தொடர்பான விசாரணை, அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அமலாக்கத்துறையை அணுகும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், அமைச்சர் உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

