கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திமுக தொடர்ந்து நாடகம் ஆடுவது தெரியவரும் என்று பாஜக பதில் அளித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுமாறு, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீனவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், தங்களின் சுயநலத்துக்காக மத்தியில் இருந்த காங்கிரசின் முன்னாள் பிரதமர் இந்திராவும், முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியும், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர்.
இது, திமுகவினர் உட்பட அனை வருக்கும் தெரியும்.
ஆனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திரும்ப திரும்ப கூறி நாடகமாகி வருகிறார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை அதிபர் அனுர குமார கடந்த செப்டம்பரில் கச்சத்தீவுக்கு பயணம் செய்தார்.
அதேபோல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதோடு மட்டும் அல்லாமல் தன் அமைச்சர்களுடன் ஸ்டாலினும் கச்சத்தீவு செல்ல வேண்டும்.
இலங்கை மக்கள் ஸ்டாலினை பார்த்து உங்கள் தந்தை கருணாநிதி எங்களுக்கு கொடுத்த கச்சத்தீவை நீங்கள் வந்து கேட்கிறீர்களே இது உங்களுக்கே நியாயமா என்று கேட்பர்.
அப்போது தான் இலங்கை விவகாரத்தில், திமுக தொடர்ந்து நாடகமாடி வருவது தெரியவரும்.
இவ்வாறு தமிழக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

