நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துறைமுருகனை அவதூறாக பேசிய நபர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணியை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக இந்தாண்டு நான்கு முனை போட்டியாக இருக்கும் என கணிக்கப்படும் நிலையில், அதன் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக விளங்கும் நாம் தமிழர் கட்சி கூட்டணியின்றி தேர்தலை களம் காணவுள்ளது. அதன் ஒரு பகுதியாக 234 தொகுதிகளுக்கும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.
234 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்
கடந்த பிப்ரவரி இறுதியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு “ மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு” என பெயரில் திருச்சி ஆலம்பட்டிபுத்தூரில் நடைபெற்றது. மாநாடு மேடையில் ஒரே நேரத்தில் 234 தொகுதிகளுக்கும் போட்டியிடவுள்ள கட்சி வேட்பாளர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். இதில் 117 ஆண்கள், 117 பெண்கள் என சராசரியாக வேட்பாளர்கள் இடம்பெற்றனர். மேலும், வேட்பாளர்களில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய அதிகபடியாக இடம்பெற்றனர். அனைத்து வேட்பாளர்களும் பட்டப்படிப்பை முடித்தவர்களாக கூறப்படுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளார். பர்ஹானா பாத்திமா நாகப்பட்டினம் தொகுதியிலும், வேதாரண்யத்தில் இடும்பாவனம் கார்த்திக், சென்னை சேப்பாக்கத்தில் ஆயிஷா பேகம், மேட்டூரில் வீரப்பன் மகள் வித்யாராணி வீரப்பன் உள்ளிட்டவர்கள் போட்டியிடவுள்ளனர்.
நெல்லையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
நெல்லை மாவட்டம், தாழையூத்து பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயின் கபீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி நாங்குநேரி தென்காசி மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, சாட்டை துறைமுருகன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் எதையும் செய்யவில்லை, திமுக அரசும் எதையும் செய்யவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அந்த நேரத்தில் கூட்டத்தில் நுழைந்த ஒரு நபர், மேடையில் பேசிக்கொண்டிருந்த சாட்டை துரைமுருகனை அவதூறாக பேசினார். இதனை கண்ட கூட்டத்தில் இருந்தவர்கள், அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அதே நேரத்தில், அவர் மதுபோதையில் பேசுவதாக குறிப்பிட்ட சாட்டை துரைமுருகன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அமர அறிவுறுத்தினார்.
உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த நபரை மீட்டு வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் இருந்தவர்களை ஒழுங்குப்படுத்தி மீண்டும் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்குள் புகுந்த நபர் செய்த செயலால் கூட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டதுடன், தாழையூத்து மெயின் பஜாரில் பரபரப்பு நிலவியது.

