வந்தவாசி அருகே வீடு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுவர் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வழுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். தொழிலாளி.
இவரது மனைவி பவானி, மகன்கள் அபினேஷ்(16), முகேஷ்(15). வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அபினேஷ் பிளஸ்-1, முகேஷ் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
மாணவர்கள் இருவரும் வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள தாத்தா முனியன் வீட்டில் தங்கி, பள்ளிக்குச் சென்று படித்து வந்துள்ளனர். முனியன் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், நேற்று அவரது வீட்டை சீரமைப்பதற்காக வீட்டை இடிக்கும் பணியில் அபினேஷ், முகேஷ் மற்றும் உறவினர் மகன் ஸ்ரீராம் உள்ளிட்டோர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது, வீட்டின் சுவர் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சகோதரர்கள் அபினேஷ், முகேஷ் ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக சுவர் சரிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த ஸ்ரீராம் (11) மீட்ட அக்கம்பக்கத்தினர், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார், இடிபாடுகளில் சிக்கியிருந்த அபினேஷ், முகேஷ் ஆகியோரது உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து தொடர்பாக பொன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

