இத்தாலி வித்தியாசமான முறையில் வங்கியை திருட சென்ற மர்மநபர்கள். அவர்கள் போட்ட திட்டத்தாலே அவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் சிக்கிய விதம் மக்களை நகைப்புக்குள்ளாகியுள்ளது.
திட்டம்
இத்தாலியில் ரோம் நகரில் உள்ள பிரபலமான வங்கி ஒன்றை கொள்ளை அடிக்க நான்கு பேர் கொண்ட கும்பல் திட்டம் போட்டுள்ளனர். இதற்காகப் பல படங்களில் வரும் வங்கி கொள்ளை அடிக்கும் காட்சிகளை பார்த்து அதைபோல திருட திட்டம் போட்டுள்ளனர்.
அந்த திட்டம் என்னவென்றால் வங்கிக்கு அருகில் பெரிய சுரங்கப் பாதையை அமைத்து அதன் மூலமாக வங்கியில் உள்ள பணத்தை திருட முடிவு செய்தனர். அதன்படி யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லாமல் அந்த கும்பல் இதற்காக ரகசிய சுரங்கப் பாதையைத் தோண்டி உள்ளனர். வங்கிக்கு அருகே வரை அவர்கள் சுரங்கப் பாதையைத் தோண்டி கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகச் சுரங்கப் பாதை திடீரென சரிந்தது. இதனால் அந்த 4 பேரும் சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டனர்.
மீட்கும் பணி
மேலும், அவர்களில் ஒருவர் மிக பெரிய போராட்டத்துக்கு பிறகு வெளியே வந்துவிட்டார். உடனே அந்த நபர் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி உள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீதம் உள்ள நபர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதில் இரு நபர்கள் சுரங்கத்தின் ஆரம்ப நிலையில் இருந்தால் அவர்களை போலீசார் எளிதாக மீட்டுவிட்டனர். ஆனால், சுரங்கத்தைத் தோண்டிக் கொண்டிருந்த நபர் உள்ளே நன்றாக மாட்டிக் கொண்டார்.
அவரை மீட்க பக்கவாட்டில் மற்றொரு சுரங்கத்தைத் தோண்டி அவரை காப்பாற்ற போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் தோண்டி சுரங்கம் சாலையில் இருந்து ஆறு அடி ஆழத்தில் இருந்ததால் அதன் பக்கவாட்டில் மற்றொரு சுரங்கத்தைத் தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும் சற்று கவனத்தோடு பக்கவாட்டில் போலீசார் சுரங்கத்தைத் தோண்டினர். அப்போது அந்த நபர் எப்படியாவது தன்னை காப்பாற்றும்படி கெஞ்சி உள்ளார். மீட்புப் பணிகள் சில மணி நேரம் வரை ஆனதால் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் லிக்விட் உணவு வழங்கப்பட்டது. சுமார் 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு அந்த நபரை போலீசார் வெற்றிகரமாக மீட்டனர். அப்போது அவர் பயங்கரமாகப் பயந்து இருந்தார். உடனடியாக அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நபருக்கு மோசமான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
கைது
அதற்குபின் நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் மூடி இருந்த கடை ஒன்றில் இருந்த சுரங்கம் தோண்டி தொடங்கி தினமும் கொஞ்ச தூரம் என்று வங்கி வரை தோண்டத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சுரங்கம் சரிந்து விழுந்ததால் இந்த 4 பேரும் சிக்கி கொண்டனர். இந்த சம்பவத்தை பற்றி தெரிந்த மக்கள் பலரும் அந்த நால்வரை நினைத்து நகைத்து வருகின்றனர்.